India

தங்கையை கிண்டல் செய்த 2 சிறுவர்கள்.. தட்டிக்கேட்ட சகோதரனுக்கு நேர்ந்த கொடுமை: டெல்லியில் கொடூரம்! | VIDEO

தலைநகர் டெல்லியிலுள்ள ஐ.டி.ஐ பூசா சாலையைச் சேர்ந்தவர், மனோஜ். 17 வயதுடைய இவருக்கு ஒரு சகோதரி உள்ளார். இவர் கம்ப்யூட்டர் வகுப்பிற்கு செல்லும்போது சிறுவர்கள் இரண்டு பேர் கிண்டல் செய்துள்ளனர். இதனால் சகோதரி, மனோஜிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டதும் கோபப்பட்ட மனோஜ், அவர்களை சந்தித்து எச்சரித்துள்ளார். மேலும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஒருமுறை அடித்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும் மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதையடுத்து நேற்றைய முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு, படேல் நகர் என்ற பகுதியில் மனோஜை கண்ட அந்த இரு சிறுவர்களும் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மனோஜை துரத்தியுள்ளனர்.

பிறகு இவர்கள் மூவருக்கும் இடையே வாக்குவாதம் கைகலப்பு என்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதில் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து மனோஜை குத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மனோஜ் உயிரிழந்தார்.

பின்னர் சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு விசாரித்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிறுவன் இரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, அங்கிருந்தவர்கள் அவரை கண்டும் காணாமல் சென்றுள்ளதும் பதிவாகியிருந்தது.

இதையடுத்து சிசிடிவி கட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சகோதரியை கிண்டல் செய்தவர்களை தட்டி கேட்ட சகோதரனை கத்தியால் குத்தி கொன்றுள்ள சிறுவர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பேருந்து நிலையத்தில் காணாமல் போன வட மாநில பெண்ணின் கை குழந்தை.. 5 மணி நேரத்தில் மீட்ட தமிழக போலிஸ் !