India

ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட 3 பள்ளி தோழிகள்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸ்.. ம.பி-யில் பரபரப்பு!

மூன்று பள்ளி மாணவி தோழிகள் ஒரே நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் செஹோர் பகுதியில் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் நேற்று பள்ளிக்கு செல்லாமல் சுமார் 120 கி.மீ., தொலைவில் இந்தூருக்கு சென்றுள்ளனர். அங்கு பன்வர்குவான் என்ற பகுதியில் 3 பெரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

3 மாணவிகளும் மயக்க நிலையில் இருப்பதாய் கண்ட அப்பகுதி வாசிகள், அவர்களை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கே சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில், விரைந்து வந்த அவர்கள் மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ள முயன்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரில், 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொரு மாணவியும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறார்.

அந்த மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நாங்கள் பள்ளி மாணவிகள் என்றும், செஹோர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் மாணவி கூறினார். மேலும், எனது தோழி ஒருவரின் ஆண் நண்பரை சந்திக்க இந்தூருக்கு வந்ததாகவும், ஆனால் அவளை அவளது நண்பன் பார்க்க வரவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மாணவி, இதனால் மனமுடைந்த தோழி, தான் கொண்டு வந்திருந்த விஷத்தை குடித்ததாகவும், மற்றொரு தோழி அவளது குடும்பத்தில் நிலவும் பிரச்னை காரணமாக விஷத்தை குடித்ததாகவும், தனது தோழிகள் குடித்ததை பார்த்து தனக்கும் வாழ விருப்பமில்லை என்பதால் தானும் விஷத்தை குடித்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், மாணவிகளின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். மூன்று பள்ளி மாணவி தோழிகள் ஒரே நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் !

Also Read: “கோவை சம்பவம் - ஆளுநர் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் கருத்துக்களை சொல்கிறார்” : சபாநாயகர் அப்பாவு ஆவேசம்!