India

ஆமைக் கறி வறுவல் கருகியதால் ஆத்திரம்.. மனைவியை கொன்று புதைத்த கணவர்.. ஒடிசாவில் பயங்கரம் !

ஒடிசா மாநிலம் சம்பால்பூர் பகுதியை அடுத்துள்ள ரவுத்பாரா என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் ரஞ்சன் பாடிங் - சாவித்ரி தம்பதியினர். இவர்கள் அந்த பகுதியில் தங்களது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், கணவர் ரஞ்சனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் வழக்கபோல் மது அருந்திவிட்டு ரஞ்சன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவியிடம் ஆமை கறி கேட்டுள்ளார். அவரும் ரஞ்சன் கேட்டதை செய்துகொடுத்துள்ளார். அப்போது ஆமை கறியை வறுக்கும் போது இலேசாக கருகியிருந்துள்ளது. இதனை கண்டதும் ஆத்திரப்பட்டு ரஞ்சன், சாவித்ரியை திட்டி, அடித்துள்ளார்.

ரஞ்சன், கடுமையாக தாக்கியதில் சாவித்ரி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் சாவித்ரி எழுந்திருக்கவில்லை. இதனால் அவரை சோதனை செய்ததில் அவரது நாடி துடிப்பு நின்று விட்டதை உணர்ந்துள்ளார் ரஞ்சன். இதனால் பதற்றமடைந்த அவர், என்ன செய்வதென்று யோசித்துள்ளார்.

பின்னர் இது வெளியே தெரிந்தால் தான் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்பதால், தனது வீட்டின் பின்புறம் குழி தோண்டி தனது மனைவியை புதைத்துள்ளார். பின்னர், தனது மனைவியை காணவில்லை என்று நாடாகாமடியுள்ளார். மேலும் தன்னுடன் சண்டை போட்டு விட்டு தான் அவர் வீட்டை விட்டு சென்றதாகவும் கூறி வந்துள்ளார். இப்படியே தொடர்ந்து கூறி வந்ததால், பதறிப்போன பெண்ணின் குடும்பத்தார், தனது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சாவித்ரியின் கணவர் ரஞ்சனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த சமயத்தில் காவல்துறையினருக்கு பயந்து ரஞ்சன் தப்பியோடியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்தனர். அப்போது தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அவரது வீட்டில் புதைக்கப்பட்டிருந்த சாவித்ரியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அதோடு ரஞ்சன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். ஒரு ஆமை கறி கருகி போன ஆத்திரத்தில் கணவனே மனைவியை கொன்று புதைந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பேச மறுத்ததால் ஆத்திரம்.. காதலி வீட்டு முன்பே காதலன் எடுத்த சோக முடிவு: அதிர்ச்சியடைந்த உறவினர்கள்!