India

"ஆம்புலன்ஸ் கிடைக்கலங்க.." - பாம்பு கடித்த சிறுவனின் சடலத்தை சுமந்து சென்ற தந்தை.. ஆந்திராவில் சோகம் !

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கீழபுத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செஞ்சய்யா. இவருக்கு 7 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கும் போது பாம்பு தீண்டியுள்ளது.

இதனால் சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த தந்தை சிறுவனை பதற்றத்துடன் உடனடியாக மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் மனம் நொந்துபோன தந்தை உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார்.இருப்பினும் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. எனவே ஏதேனும் ஆட்டோ கிடைக்கிறதா என்று பார்க்கையில் அதுவும் கிடைக்கவில்லை என்பதால் மனமுடைந்த தந்தை, தனது மகனின் சடலத்தை தோளில் சுமந்தும், பின்னர் இருசக்கர வாகனத்தில் எடுத்தும் சென்றுள்ளார்.

இது தொடர்பான காட்சி வெளியாகி பார்ப்போர் மனதை உருக்கி வருகிறது. பாம்பு கடித்து இறந்து போன சிறுவனின் உடலை தந்தையே சுமந்து சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 5 ஆண்டுகளில் காணாமல்போன 12 பெண்கள் நரபலியா?.. மீண்டும் விசாரணை தொடங்கிய கேரள போலிஸ்!