India

ரயில்வே வழங்கிய சமோசாவில் குட்கா தாள்.. பகிரங்க மன்னிப்பு கேட்ட IRCTC.. இணையவாசிகள் கண்டனம் !

இந்தியாவில் தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தால் உணவுகள் வழங்கப்படுகிறது. இதற்காக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு ரயிலில் உணவு சமைத்து பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ரயிலில் வழங்கப்பட்ட சமோசாவில் குட்கா பொருள் விற்கப்படும் தாள் இருந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. கடந்த சில தினங்களுகு முன்பாக மும்பை - லக்னோ இடையே செல்லும் ரயிலில் பயணி ஒருவர் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் விற்பனை செய்யப்படும் சமோசா வாங்கியுள்ளார்.

அதை சாப்பிட்டு கொண்டிருந்தபோது மஞ்சள் நிறத்தில் ஒரு தாள் அதில் இருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சமோசாவை புகைப்படம் எடுத்து ட்விட்டர் மூலம் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு புகார் அனுப்பியுள்ளார்.

அதில், "நான் லக்னோவுக்கு சென்று கொண்டிருக்கிறேன். பயணத்திற்கு இடையே சாப்பிடுவதற்காக ஒரு சமோசா வாங்கினேன். பாதி சமோசா சாப்பிட்ட பிறகு மஞ்சள் நிற பேப்பர் உள்ளே இருப்பதை பார்க்க முடிந்தது. ஐ.ஆர்.சி.டி.சி ஊழியர் இந்த சமோசாவை வழங்கினார்" என்று கூறியுள்ளார்.

இதைப் பார்த்த பலரும் அந்த பேப்பர் குட்கா பொருள் விற்கப்படும் பேப்பர் என கூறியுள்ளனர். இந்த புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து ஐ.ஆர்.சி.டி.சி இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக ரயில்வேயில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறுவது அதிகரித்து வருவதாக இணைய வாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: வீட்டை விட்டு வெளியேறிய மனைவி.. ஆத்திரத்தில் மனைவிக்கு வைத்த பொறியில் சிக்கிய மாமியார்.. நடந்தது என்ன ?