India

ஒரே நாளில் பங்குச்சந்தையில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு.. மோடி அரசின் நடவடிக்கையால் வீழ்ச்சியில் பொருளாதாரம்!

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.

இதன் பின்னர் வந்த கொரோனா பெரும்தொற்று, உக்ரைன் போர் ஆகியவற்றின் காரணமாக சரிந்து வரும் இந்திய பொருளாதாரம் மேலும் சரிவை சந்தித்தது. அதனை மீட்டெடுக்க ஒன்றிய அரசு செய்த முயற்சிகள் பொருளதார சரிவை மேலும் கடுமையாக்கியது.

குறிப்பாக மோடியின் நண்பர்களான கார்பொரேட் முதலாளிகளுக்காக கார்பொரேட் வரி உயர்த்தப்பட்டது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட பெட்ரோல்,டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. இது இந்தியாவின் முதுகெலும்பான நடுத்தர தொழில்களை அடியோடு பாதித்தது.

இதன் காரணமாக, பொதுமக்களின் நுகர்வு திறன் பாதிக்கப்பட்டு அனைத்து துறைகளும் அடிவாங்கத் தொடங்கின. அதோடு பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெற்றதால் பங்குச் சந்தையும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்திய நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் 81.60 ஆக வீழ்ச்சியடைந்தது. இதன் தாக்கம் பங்குச் சந்தையில் நேரடியாக எதிரொலித்தது.

தொடர்ந்து 4 நாள் மந்த நிலையால் வர்த்தகத்தின் இடையே நிஃப்டி 17,000 புள்ளிக்கும் கீழ் சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 954 புள்ளிகளை இழந்து 57,145-ல் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 311 புள்ளிகள் குறைந்து 17,016-ல் நிலைத்தது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு ரூ.269.86 லட்சம் கோடியாக சரிந்தது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இது அனைத்துக்கும் மோடி அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளே காரணம் என பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: 'வெளியே போ'.. பள்ளியை மூட சொன்ன பா.ஜ.க-வினரை விரட்டியடித்த பொதுமக்கள்!