India

துப்பாக்கியால் மனைவியை சுட்ட தொழிலதிபர்.. பயத்தில் கத்தியதால் 8 வயது மகளுக்கு நேர்ந்த சோகம் !

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்தவர் பாண்டுரங் உபே. கட்டுமான தொழிலதிபரான இவர் தனது மனைவி மற்றும் 8 வயது பெண் குழந்தையோடு வசித்து வருகிறார். குடிபோதைக்கு அடிமையான இவர், வீட்டிற்கு அடிக்கடி குடித்துவிட்டு வருவது வழக்கம். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டுரங் உபே குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மனைவி இவரிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்படவே போதையில் இருந்த பாண்டுரங் ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த லைசென்ஸ் துப்பாக்கியை எடுத்து தனது மனைவி மீது சுட்டுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியில் மகள் அலறியதால் பெற்ற மகள் என்றும் பாராமல் அவரையும் சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி சூடு சத்தம் மற்றும் அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் சம்பவ இடத்தை விட்டு பாண்டுரங் தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து விரைந்து வந்த அவர்கள், இரத்த வெள்ளத்தில் கிடந்த தாயையும் மகளையும் மீட்டு மருத்துவமணிக்குக் அழைத்து சென்றதோடு காவல்துறைக்குக்ம் தகவல் கொடுத்தனர். பின்னர் மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்ததில் தாய் இறந்துவிட்டார் என்றும், மகள் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் அதிகாரிகள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய பாண்டுரங்கை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 500 ரூபாய் பெட்ரோலால் 55 ஆயிரம் ரூபாய் இழந்த வாடிக்கையாளர்.. பெட்ரோல் பங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !