India

"உங்க APP-ல் பெரிய குறைபாடு இருக்கு.." -தவறை சுட்டிக்காட்டிய மாணவருக்கு ரூ.38 லட்சம் பரிசு கொடுத்த INSTA!

தற்போது இருக்கும் இந்த இணைய உலகில் அனைத்தும் இணையத்திலேயே நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் நமது திறமைகளை இந்த இணையத்தின் வாயிலாகவே உலகிற்கு தெரிய படுத்த முடிகிறது. அந்த வகையில் சீன செயலியான டிக்-டாக் கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பு உலகெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டு இந்தியாவிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த செயலி இந்திய பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, அவர்கள் அதன் வாயிலாக டான்ஸ், நடிப்பு, காமெடி, தத்துவம் உள்ளிட்டவையை வீடியோ செய்து வெளியிட்டு வந்தனர். இதற்கு என்று ரசிகர்கள் குவிந்தனர். இது தங்கள் திறமைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் ஒரு இடமாக அதன் பயனர்கள் உணர்ந்தனர்.

ஆனால் சில வருடங்களுக்கு பிறகு சீன செயலிகளை இந்தியாவில் தடை செய்வதாக கூறி பல ஆப்-கள் தடை செய்யப்பட்டது. அதில் இந்த டிக்-டாக்கும் அடங்கும். டிக்-டாக் செயலியை தடை செய்யப்பட்டதையடுத்து அதன் பயன்ரகள் வேதனையில் இருந்தனர். அவர்களுக்கு வழிகாட்டும் வகையில் டிக்-டாக் பயன் போலவே இன்ஸ்டாகிராம் ஆப்பில் 'ரீல்ஸ்' என்று புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரீல்ஸை தற்போது பயனர்கள் பலரும் பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தளங்களில் ஏதேனும் சிறு குறைபாடுகள் இருந்தாலும் அதனை கண்டறிந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தெரியப்படுத்துபவர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் நீரஜ் சர்மா. ஒரு மாணவரான இவர், ஒரு ரீல்ஸின் கவர் பிக் என்று சொல்லப்படும் தம்ப்னைலை (thumbnail) அவர்கள் பாஸ்வேர்டு இல்லாமல் வெறும் ஐடியை மட்டும் கொண்டே மாற்ற முடியும் என்பதை கண்டறிந்துள்ளார். இவரது இந்த கண்டுபிடிப்பை உடனே இன்ஸ்டா நிறுவனமான மெட்டா-விற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அவர்களும் உடனே அதனை டெமோ வீடியோவாக எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளனர். இதையடுத்து இந்த மாணவரும் ஒரு வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டா நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். அதனை பெற்றுக்கொண்ட அவர்கள், சோதனை செய்தனர். அப்போது தங்கள் செயலியில் குறைபாடு இருப்பதை உறுதி செய்தனர்.

இது தொடர்பான புகாரை இந்த மாணவர் கடந்த மே மாதம் தெரியப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், தற்போது அவருக்கு ரூ.35 லட்சம் சன்மானமாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு இந்த சன்மானம் அறிவுக்கு சில மாதங்கள் தாமதமானதால், அதற்கு நஷ்ட ஈடு போன்று ரூ.3 லட்ச ரூபாய் என மொத்தம் ரூ.38 லட்சத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. குறைகளை கண்டறிந்து பரிசு பெற்ற இந்த மாணவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also Read: "செல்போன் திருடிய திருடர் கவனத்திற்கு.." - COOL DRINKS கடையில் திருடியவருக்கு அறிவுரை வழங்கிய நபர் !