India

கல்லூரி விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா.. வீடியோவை ஆண் நண்பருக்கு அனுப்பிய மாணவி.. நடந்தது என்ன?

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் வெளி மாநில மற்றும் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு ஏதுவாக இருப்பதால் அப்பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கியும் மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு பயிலும் எம்.பி.ஏ., முதலாமாண்டு படித்து வரும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் குளியலறையில் குளிக்கும் காட்சியை அவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். மேலும் அதனை தனது ஆண் நண்பருக்கு வாட்சப் வாயிலாக அனுப்பியும் உள்ளார். அந்த வீடியோக்கள் எல்லாம் ஆபாச இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் இந்த காட்சிகள் லீக் ஆகியுள்ளன.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாணவிகளுக்கு தெரிய வர, நேற்று இரவு மாணவிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீண்ட நாட்களாக குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த அந்த பெண் விடுதியில் தங்கியிருந்த 60-க்கும் மேற்பட்ட மாணவிகளின் குளியல் வீடியோக்களை எடுத்து அனுப்பியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதோடு அந்த மாணவி மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைத்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 பெண்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும், அதில் 3 பேர் உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட மாணவி மீது இபிகோ 354சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, "இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டது 60 பேர் அல்ல. ஒருவர் வீடியோ மட்டுமே இருந்துள்ளது. இருப்பினும் 60-க்கும் மேல் இருக்கலாம் என மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் சில பாதிக்கப்பட்ட மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி தான். மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவி போராட்டத்தின் போது மயக்கம் அடைந்தவர். அவரும் இப்போது நலம்.

சம்பந்தப்பட்ட மாணவி கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆபாச தளங்களில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டு வருகிறது. டெலிக்ராமில் மற்றும் சமுக வலைதளங்களில் பரவும் வீடியோவையோ @sasnagarpolice ஐடிக்கு ரிப்போர்ட் செய்யுங்கள்.

சண்டிகர் பல்கலைக்கழகத்திற்கு ஏதேனும் வீடியோக்கள் வந்தால், அதனை பார்க்காதீர்கள், பரப்பாதீர்கள். அதே போல இந்த பெண்ணின் புகைப்படம், அவரது நண்பனின் படம், இருவரது வாட்சப் உரையாடல்கள் இதெல்லாம் வைரலாக பரவி வருகிறது. இதையெல்லாம் ஒரு நொடியில் போலியாக கூட உருவாக்கிவிட முடியும். காவல்துறை விசாரித்து வருகிறது. உண்மை எதுவென தெரியாமல் எதுவும் பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளனர்.

Also Read: ஹரியானா : தொடர் பாலியல் வன்கொடுமை.. குடும்ப வறுமையால் வேலைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை !