India

"நாங்க பாத்துக்கிறோம், எங்கேயும் போகாதீங்க".. IT நிறுவனங்களிடம் கெஞ்சும் கர்நாடக அரசு!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெங்களூர் மாநகரமே வெள்ளக்காடாகக் காட்சியளிப்பதுடன் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதிலும் நகரில் உள்ள சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பு முதல் கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு வரை சுமார் 17 கி.மீ புறநகர் வட்டச்சாலை சாலையில் 500க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் தற்போது மழை நீரால் மூழ்கியுள்ளது. இப்பகுதியில் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாததே இந்த நிலைக்குக் காரணம் என கூறப்படுகிறது.

இந்த மழை வெள்ளம் காரணமாக ஐ.டி நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.225 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை என்றால் தங்களது நிறுவனத்தை வேறு இடத்துக்கு மாற்றுவோம் ஐ.டி நிறுவனங்கள் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்குக் கடிதம் எழுதியுள்ளன.

மேலும் சில நாட்களாகப் பெய்த கன மழை காரணமாக ரூ.764713 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒன்றிய அரசிடம் பேரிடர் நிவாரண நிதி கேட்கவும் கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து ஐடி நிறுவனங்கள் தங்கள் இடத்தை மாற்றுவதாக கடிதம் எழுதிய நிலையில் இன்ஃபோசிஸ், கோல்ட்மேன் சாக்ஸ், விப்ரோ, இன்டெல் மற்றும் டாடா நிறுவனங்களின் தலைவர்களுடன் அமைச்சர் அஷ்வத் நாராயணன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அப்போது, "அடுத்த பருவமழையில் இதுபோன்ற வெள்ள பாதிப்பு ஏற்படாது என உறுதி அளித்துள்ளார். மேலும் இப்பகுதியில் வெள்ளத் தடுப்பு கட்டமைப்பு குறித்த மேம்படுத்தப்பட்ட வரைபடத்தை உருவாக்குவோம். தங்கள் நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டாம். அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆக்கிரமிப்புகள் அகற்றி வடிகால்களைப் புனரமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: லீவு இல்ல.. ரூ. 50 கொடுத்து டிராக்டர்களில் அலுவலகம் செல்லும் IT நிறுவன ஊழியர்கள்!