India

சிறுவனின் குடலில் 1 கிலோ புழுக்கள்.. வயிற்று வலி வந்தால் கவனம் வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை !

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த சிறுவனுக்கு சில நாட்களாக கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்ஸ்ரே எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அதன்படி எக்ஸ்ரே எடுக்கப்பட்டு அதன் முடிவுகளை பார்த்த மருத்துவர்கள் சிறுவனின் சிறுகுடலில் அஸ்காரிஸ் புழுக்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவற்றை அகற்ற அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

சிறுகுடலில் இருந்த புழுக்களை அகற்ற அகற்ற மேலும் மேலும் அஸ்காரிஸ் புழுக்கள் வந்துகொண்டே இருந்துள்ளது. சிறுவனின் சிறுகுடலில் இருந்து சுமார் 1 கிலோ அளவிலான அஸ்காரிஸ் புழுக்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் அந்த சிறுவன் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை தற்போது நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் ஒருவர், இதற்கு முன்னர் இதுபோன்று புழுக்கள் அகற்றப்பட்டாலும் நோயாளியின் குடலில் இருந்து இவ்வளவு பெரிய அளவிலான அஸ்காரிஸ் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்படுவது இதுவே முதல் முறை என தெரிவித்தார். மேலும், குடலில் அதிக எண்ணிக்கையிலான புழுக்கள் இருந்தால், உங்களுக்கு வயிற்று வலி, சோர்வு, வாந்தி மற்றும் எடை இழப்பு அல்லது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம் என்றும் வயிற்று வலி வந்தால் அசட்டையாக இருக்க வேண்டாம் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

Also Read: ஆற்றில் மிதந்து வந்த உடல் உறுப்புகள்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை.. தந்தை,மகன் கைது !