India

உ.பி : புனித கங்கை நதியில் எப்படி கோழிக்கறி சமைக்கலாம் ? -படகில் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு !

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் உள்ள தாராகஞ்ச் என்னும் பகுதியில் இருக்கும் நாகவாசுகி கோயில் அருகில் சிலர் கங்கை நதியில் படகில் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் படகில் கோழிக்கறியை சமைத்ததோடு ஹூக்கா எனப்படும் பைப் மூலம் புகைப்பிடித்துக்கொண்டிருந்தனர்.

இது தொடர்பாக வீடீயோவை அவர்கள் இணையத்தில் பதிவேற்றிய நிலையில், அது வைரலாகியுள்ளது. இதைப் பார்த்த பலரும், புனிதமான கங்கை நதியில் இதுபோன்ற செயலை செய்ததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புனித நதியாகக் கருதப்படும் கங்கையில் கோழிக்கறியை சமைத்ததால் அவர்கல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய போலிஸ் அதிகாரி சைலேஷ் குமார், "கங்கை ஆற்றில் படகில் கோழிக்கறி சமைத்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்" என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. உ.பி-யை சேர்ந்த தாயின் 2-வது கணவர் செய்த கொடுமை !