India

ஒருதலை காதலால் மாணவிக்கு நேர்ந்த அவலம்.. உறவினர்களால் 144 தடை பிறப்பிப்பு.. ஜார்கண்டை உலுக்கிய சம்பவம் !

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கட்டுமானப் பணியாளரான ஷாருக் ஹுஸ்ஸேன் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். தனது காதலை ஏற்குமாறு தொடர்ந்து வற்புறுத்தியும் வந்துள்ளார்.

ஆனால் ஷாருக்கின் காதலை ஏற்க மறுத்ததோடு, அவரை மாணவி நிராகரித்து வந்துள்ளார். ஆனால், மாணவி தொலைபேசி எண்ணிற்கு அடிக்கடி தொடர்பு கொண்டு காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் ஷாருக். இதனால் பெரும் மன உளைச்சலில் காணப்பட்டு வந்துள்ளார் மாணவி.

இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஷாருக், தனது காதலை ஏற்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மாணவி, தனது தந்தையிடம் தான் இத்தனை நாட்கள் பட்ட துன்பத்தை கூறி அழுதுள்ளார். இதனை கேட்ட மாணவியின் தந்தை, அவரை சமாதானப்படுத்தி ஷாரூக்கின் பெற்றோரிடம் நாளை பேசுவதாக கூறி அமைதிப்படுத்தி தூங்க வைத்துள்ளார்.

இதையடுத்து காலை மாணவியின் வீட்டிற்கு இரகசியமாக வந்த ஷாருக், தூங்கிக்கொண்டிருந்த மாணவியின் உடலில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு பற்ற வைத்துள்ளார். இதனால் அலறியடித்து வீட்டை விட்டு செல்ல முயன்ற மாணவியை கண்ட பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு அவர் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பின்னர் மயக்க நிலையில், கீழே விழுந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரது உடல் 90% வெந்ததால் அவர் உயிர்பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையில் மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், ஷாருக்கை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி, தற்போது உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் அங்கு வந்த காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். மேலும் பரபரப்பை கட்டுப்படுத்த அந்த பகுதியல் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு தலை காதலால் பள்ளி மாணவியை உயிருடன் எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தமிழ்நாட்டில் காணாமல் போன 2 சாமி சிலைகள்.. அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு!