India

'இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அவமானம்..' - தற்கொலை செய்து கொண்ட 17 வயது சிறுமி ! - காரணம் என்ன ?

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அமித் (பெயர்மாற்றப்பட்டுள்ளது). அந்த பகுதியில் விவசாயியான இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில், வழக்கமாக தந்தை வேலைக்கு செல்லும் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் சிறுமியை சந்திக்க அவர்களது உறவினரின் 27 வயதுடைய மகன் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதோடு அவரை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

மேலும் இதை பற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். எனவே சிறுமியும் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லவில்லை.

இதையடுத்து அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக உணர்ந்த சிறுமி அதனை உறுதிப்படுத்திக்கொண்டார். பின்னர் இதைப்பற்றி வெளியே சொன்னால் தனது குடும்பத்தாருக்கு அவமானம் நேரும் என்று எண்ணிய சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன்னர், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சிறுமி பூச்சிமருந்து குடித்ததை அறிந்த பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி மருத்துவமனையிலே உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களது உறவினர் மகன், சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் இதனால் தான் சிறுமி தற்கொலை செய்துகொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த உறவினர் இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: விடாமல் அழுத குழந்தை.. கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை - ஹரியானாவில் நேர்ந்த சோகம் !