India

"இனி சபரிமலைக்கு பிராமணர் அல்லாதவரும் பிரசாதம் தயாரிக்கலாம்.." - கேரள அரசு அதிரடி !

கேரளா மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை போட்டு வழிபடுவது வழக்கம். இந்த கோயிலில் மண்டல - மகரவிளக்கு பூஜை நிகழ்வையொட்டி, உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் பிரசாதம் போன்றவை பிரசாதங்களாக படைக்கப்படும்.

இந்த பிரசாதங்களையெல்லாம் மலையாள பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவசம் போர்டு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து பல்வேறும் அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அம்பேத்கர் கலாசார மன்றத்தின் தலைவர் சிவன் என்பவர், இது குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும் செயல் என்றும், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பு கொடுத்துள்ள விளம்பரம் சமத்துவக் கொள்கைக்கு எதிரானது என்றும் அம்மாநில அரசிடமும், மனித உரிமை ஆணையத்திடமும் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், மறுபடியும் நேற்று தேவசம் போர்டு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் சபரிமலை கோயிலுக்கு மலையாளி பிராமணர் அல்லாத அனைத்து சாதியினரும் பிரசாதம் தயாரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பல்வேறு அமைப்புகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.