India

தொழிற்சாலையில் விஷவாயு கசிவு.. 50 ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல்: நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திரா மாநிலம், அணகாப்பள்ளி மாவட்டத்தில் தனியார் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகத் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் பணியிலிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும் பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் தொழிலாளர்களை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த விஷவாயு கசிவு குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 50க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த ஆடை தொழிற்சாலையில் இப்படி விஷவாயு கசிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஜூன் 3ம் தேதியும் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போதும் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே இந்த தொழிற்சாலை மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: காட்டாற்று வெள்ளத்தில் தவித்த காட்டுயானை.. மனித நேயத்தோடு மீட்ட கேரள அரசு - நெகிழ்ச்சி சம்பவம்! (Video)