India

வாங்காத உணவுக்கு ரூ.45 லட்சம் செலவு.. பிரியாணியில் ஊழல் செய்த வடமாநில விளையாட்டு துறை அதிகாரிகள் !

ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் கால்பந்து போட்டிகளை நடத்தவும், கேலோ இந்தியா, முப்தி நினைவு தங்கக் கோப்பை உள்ளிட்ட கால்பந்து போட்டி தொடர்களை நடத்தவும் ஜம்மு காஷ்மீர் ஸ்போர்ட்ஸ் கவுன்சில், ஜம்மு காஷ்மீர் கால்பந்து சங்கத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில் இந்த விளையாட்டு மேம்பாட்டு நிதியில் ரூ.45 லட்சத்தை ஜம்மு காஷ்மீர் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ள தகவலில், போட்டிகளில் பங்கேற்ற கால்பந்து அணி வீரர்களுக்கு பிரியாணி வழங்கிய வகையில் ஸ்ரீநகரில் உள்ள பிரபல உணவகத்திற்கு சுமார் ரூ.43 லட்சத்து 6 ஆயிரத்து 500 வழங்கப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் கால்பந்து சங்க நிர்வாகிகள் கணக்கு காட்டியுள்ளனர்.

ஆனால், இதுவரை நடத்தப்பட்ட எந்த போட்டிகளிலும் எந்த அணி வீரர்களுக்கு பிரியாணி வழங்கியதற்கு ஆதாரம் இல்லை. இது தொடர்பாக கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகிகள் சமர்ப்பித்துள்ள ரசீதுகள் போலியானவை என்பது தெரியவந்தது.

இது தவிர பிரபல நிறுவனங்களுக்கு பல்வேறு சேவைகளுக்காக பணம் வழங்கியதாக போலி ரசீதுகள் தயாரித்து ஊழல் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

இந்த முறைகேடு வழக்கில் ஜம்மு காஷ்மீர் கால்பந்து சங்க தலைவர் ஜமீர் அகமது தாகூர், பொருளாளர் எஸ்.எஸ்.பண்டி மற்றும் தலைமை நிர்வாகி எஸ்.ஏ.ஹமீது உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விளையாட்டு துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கதறி அழுது, தலைமுடியை பிய்த்துகொண்ட பள்ளி மாணவிகள்.. பேய் பிடித்ததாக அச்சம்.. வெளிவந்த அதிர்ச்சி வீடியோ!