India

“அண்ணியை சுத்தியால் அடித்து கொலை செய்த மைத்துனன்” - போலிஸ் விசாரணையில் ‘பகீர்’ தகவல்!

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் வசித்து வந்தவர் ட்விங்கிள் என்ற இளம்பெண். 25 வயதுடைய இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு கெளரவ் என்ற இளைஞருடன் திருமணமானது. தற்போது ட்விங்கிளுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு சாலை விபத்தில் கெளரவ் உயிரிழந்தார்.

இந்த நிலையில், கணவன் இறந்தவுடன் குழந்தைகளுடன் தனியே வசித்து வந்த ட்விங்கிள், அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கெளரவின் தம்பி அபிஷேக், தனது அண்ணியான ட்விங்கிளை சந்தேகித்துள்ளார். மேலும் இதுபோன்று வேறு யாரிடமும் பேசக்கூடாது என்று அவருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்விங்கிள் செல்போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அதனை கண்ட அபிஷேக், சமயலறையில் இருந்த கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்து, தனது அண்ணியின் அறையில் நுழைந்து சண்டையிட்டுள்ளார்.

மேலும் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியால் ட்விங்கிளை கடுமையாக தாக்கியதோடு, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ட்விங்கிளின் அலறல் சுத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள், இரத்த வெள்ளத்தில் கிடந்த ட்விங்கிள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் விரைந்து வந்து அபிஷேக்கை கைது செய்தனர். மேலும் ட்விங்களின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அண்ணியை சந்தேகப்பட்டு மைத்துனன் கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சாலை விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்.. இறுதி தருணத்தில் பிறந்த குழந்தை: 'இறந்தாலும் வாழவைக்கும் தாய் !'