India

"இந்தியாவில் கைதான பெரும்பாலான பாகிஸ்தான் ஏஜென்டுகள் RSS உறுப்பினர்தான்" -RJD தலைவர் குற்றச்சாட்டு!

பீகார் மாநிலத்தில் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நிதிஸ் குமார் இருந்து வருகிறார். அங்கு பிரதான எதிர்க்கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) இருந்து வருகிறது.

சமீபத்தில் பீகார் சென்ற மோடியை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து உளவுத்துறை அதிகாரிகள் இவர்களிடம் விசாரணை நடத்தியதில், இவர்கள் தடைசெய்யப்பட்ட இசுலாமிய அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாட்னா காவல் கண்காணிப்பாளர் மனவ்ஜீத் சிங் தில்லானிடம் இஸ்லாமிய அமைப்பின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மனவ்ஜீத் சிங், "இஸ்லாமிய அமைப்பு உடற்பயிற்சி என்ற பெயரில் இளைஞர்களை தங்கள் மையத்துக்கு அழைத்து மூளைச்சலவை செய்கிறது. இதைதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் செய்கிறது. ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகளிலும் லத்திகள் பயன்படுத்தப்படுகின்றன" எனக் கூறினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகதானந்த் சிங், இந்தியாவில் பாதுகாப்பு ஏஜென்சிகளால் கைதுசெய்யப்பட்ட பெரும்பாலான பாகிஸ்தான் ஏஜென்டுகள், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்தான் என்று கூறியுள்ளார்.

பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் என, பாதுகாப்பு ஏஜென்சிகளால் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் ஏஜென்ட்டுகள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் தொலைபேசியில் பேசும் இந்தியக் குடிமக்கள் தேச விரோதிகளாகக் கருதப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ளவர்களிடம் தொலைபேசியில் பேசுவது தேச விரோத செயலா?" எனக் கூறினார்.இவரது கருத்தை பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: PM மோடி மீது தாக்குதல் நடத்த சதி திட்டம்: “RSS இதே வேலையைத்தான் செய்கிறார்கள்” - பீகார் SP சொன்னது என்ன?