India

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்கள்.. கடைசி ஆசையை நிறைவேற்றிய போலிஸ் அதிகாரி: நெகிழ்ச்சி சம்பவம்!

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த முகமது சல்மான். ஓசூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் மிதிலேஷ். இந்த இரண்டு சிறுவர்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக சிறுவர்கள் இருவரும் பெங்களூர் அருகே உள்ள நாராயண இருதயாலயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிருக்குப் போராடிவரும் இரண்டு சிறுவர்களின் கடைசி ஆசை என்ன என மருத்துவர்கள் கேட்டுள்ளனர்.

இதற்கு அவர்கள், "போலிஸ் உயர் அதிகாரி ஆக வேண்டும் என்பதுதான் ஆசை" என கூறியுள்ளனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் போலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வடகிழக்கு மண்டல துணை ஆணையர் பாபா இருவரையும் அலுவலகத்திற்கு அழைத்து, போலிஸ் சீருடை அணியவைத்து துணை ஆணையர் நாற்காலியில் அமரவைத்துள்ளார். பின்னர் அலுவலகத்தில் இருந்து போலிஸார் சிறுவர்களுக்கு சல்யூட்டி அடித்து அவர்களை வரவேற்றனர்.

மேலும் ஒருநாள் முழுவதும் போலிஸ் சீருடையில் துணை ஆணையர் நாற்காலியில் அமர்ந்து இரண்டு சிறுவர்களும் பணியாற்றினர். பின்னர் மீண்டும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக இரண்டு சிறுவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இரண்டு சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றிய போலிஸாருக்கு சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி கூறியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

Also Read: பள்ளிகளில் பாலியல் கல்வியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.. கேரள உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு!