India
"பா.ஜ.க.வில் தலித் தலைவர்களுக்கு மரியாதை இல்லை" -உ.பி. யோகி அரசில் இருந்து அமைச்சர் ராஜினாமா!
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றார். உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சியை பிடித்ததில் இருந்து அங்கு எதிர்க்கருத்து கொண்டவர்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
பா.ஜ.க அரசை எதிர்த்து போராடுபவர்கள் மற்றும் அரசின் குறைகளை சொல்பவர்களை கூட உத்தரபிரதேச அரசு கைது செய்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையிலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், பா.ஜ.க பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை புறக்கணிக்கிறது, உயர்சாதி என்று சொல்லப்படும் சமூக மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறது எனக் கூறி பா.ஜ.க.வில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியே வந்தனர்.
இந்த நிலையில், தற்போது பா.ஜ.க.வில் தலித் தலைவர்களுக்கு உரிய மரியாதை இல்லை எனக் கூறி அக்கட்சியில் இருந்து தலித் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர தினேஷ் காதிக். இவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், "நீர் வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் முக்கிய கூட்டங்கள் குறித்து அமைச்சரான எனக்கு எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை. நான் பிறப்பிக்கும் உத்தரவை எந்த அதிகாரியும் கேட்பதில்லை. தொலைபேசியில் பேசினால் கூட முதன்மைச் செயலாளர் பதில் சொல்வதில்லை.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் ஓரங்கட்டப்படுகிறேன். ஒரு மாநில அமைச்சராக தனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் அமைச்சராக பணியாற்றுவதால், தலித் சமுதாயத்திற்கு எந்த பலனும் இல்லை. இது தலித் சமூகத்தை அவமதிக்கும் செயல். அதனால்தான் நான் ராஜினாமா செய்கிறேன்" எனக் கூறியுள்ளார். மேலும் யோகி ஆட்சியில் ஊழல் நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!