India

தந்தைக்கு தெரியாமல் படகை எடுத்துச் சென்று பார்ட்டி.. மதுபோதையில் கடலில் மூழ்கி இளைஞர் பலி: பகீர் சம்பவம்!

புதுச்சேரி மடுவுபேட் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (19). புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது கல்லூரி நண்பரான சோலைநகர் பகுதியை சேர்ந்த மாதேஷ் (19) உள்ளிட்ட நண்பர்கள் 12 பேருடன் சேர்ந்து கடந்த வியாழக்கிழமை மாலை கடலுக்குள் சென்று குளிக்க திட்டம்மிட்டனர்.

இதற்காக மாதேசின் தந்தைக்கு சொந்தமான படகை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு, தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு கடலுக்குள் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்ற பின்னர் அவர்கள் கடலுக்குள் படகை நிறுத்திவிட்டு அங்கு மது அருந்தியுள்ளனர். பின்னர் அவர்களில் சிலர் கடலுக்குள் இறங்கி குளித்துள்ளனர்.

அப்போது விக்கி உள்பட 3 பேர் கடலில் மூழ்க தொடங்கினர். இதனை பார்த்த படகில் இருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்க முயற்சி செய்ததில், 2 பேரை பத்திரமாக மீட்டனர். இதில் விக்கி மட்டும் கடலுக்குள் மூழ்கினார்.

இதனை தொடர்ந்து மற்ற கல்லூரி மாணவர்கள் கரைக்கு திரும்பியதும், இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், போலிஸார் வழக்குப்பதிவு செய்து மாணவன் கடலில் மாயமானது குறித்து கடலோர காவல் படையினர் மற்றும் மீனவ கிராமங்களுக்கு தகவல் தெரிவித்து, மாணவனை தேடி வந்த நிலையில், இன்று காலை புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் மாயமான மாணவன் விக்கியின் உடல் கரை ஒதுங்கியது.

இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலிசார் உடற்கூறு ஆய்வுகாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: இடிந்து விழுந்த 8 அடி சுவர்.. இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பரிதாப பலி: டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!