India

காதல் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை.. பெற்ற மகனின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை - பகீர் சம்பவம் !

ஆந்திர மாநிலம் திருப்பதி வடமாலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் ரேணிகுண்டா அருகே உள்ள நிறுவனத்தில் தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு 8 வயது மற்றும் 5 வயது மகளும் உள்ளனர்.

இந்நிலையில் மூத்த மகன் பள்ளியில் படித்து வரும் நிலையில், இரண்டாவது குழந்தை மட்டும் வீட்டில் இருந்தது. கடந்த சில நாட்களாக இருவருக்கும் கருத்துவேறுபாடு இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மனைவி ஐஸ்வர்யாவை ரமேஷ் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா அவரது அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதனிடையே மகனின் கொடூரத்தை தாங்கிக்கொள்ள முடியாத ரமேஷின் தாயார் இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் போலிஸார் ரமேஷை அழைத்து விசாரித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த ஆத்திரத்தில் இருந்த ரமேஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்த நிலையில், தனது சொந்த மகன் மீது அனைவரின் கண்முன்னே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதில் தீ பிடித்த சிறுவனை அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து தந்தை ரமேஷைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கனமழையால் ராட்சத மண்சரிவு.. சீருடையோடு JCB இயக்கி சாலைகளை சீரமைத்த காவலர் - குவியும் பாராட்டு !