India

YOUTUBE-ஐ பார்த்து Costly கார்கள் திருட்டு.. கோவாவில் குதூகலமாக இருந்த பட்டதாரி - மடக்கிப்பிடித்த போலிஸ்!

அண்மைக்காலமாக இணையம் என்பது இல்லாமல் உலகம் இயங்காது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் தங்களது சந்தேகங்களை இணையத்தில் இருந்தே கண்டறிந்து கொள்கின்றனர். குறிப்பாக Youtube என்ற இணையம், உலக அளவில் பல கோடி வாசகர்களை கொண்டுள்ளது. நாம் எதையாவது செய்முறை வடிவத்தில் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு Youtube ஒரு சிறந்த மேடை.

இதில், சமையல் குறிப்பில் இருந்து, சாவு குறிப்பு வரை அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். இதனை அண்மைக்காலமாக பலரும் தவறான வழிகளில் உபயோகித்து வருகின்றனர். குறிப்பாக துப்பாக்கி உருவாக்குதல், வெடிகுண்டு தயாரித்தல் போன்றவை இணையத்தில் தேடி கற்றுக்கொள்கின்றனர். அதன்படி கர்நாடகாவை சேர்ந்த பி.காம் பட்டதாரி ஒருவர் youtube-ஐ பார்த்து உயர் ரக கார்களை திருடி வந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). ஒரு பி.காம் பட்டதாரியான இவர், அவ்வப்போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி ஒரு நாள், இவர் திருடும்போது, காவல்துறையினர் இவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து ஆந்திராவிலுள்ள மதனப்பள்ளி துணைச் சிறையிலடைத்தனர்.

அப்போது சிறையில் இருந்த அருண்குமாருக்கு, அங்கிருந்த மற்றொரு கைதியான ராகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராகேஷும் இவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், ராகேஷ் கார் பூட்டுகளை உடைக்கப் பயன்படும் ஒரு தானியங்கி கருவியைப் பற்றி அருண்குமாருக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

இதையடுத்து சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்த அருண்குமார், ராகேஷ் சொல்லிக்கொடுத்த கருவியை வாங்கி Youtube பார்த்து பயன்படுத்த தொடங்கியுள்ளார். அந்த கருவியை பயன்படுத்தி பெங்களூருவில் உள்ள, HSR Layout மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நுழைந்து இரவு நேரங்களில் கார்களை திருடி வந்துள்ளார். அந்த பகுதியில் வாகனங்கள் திருட்டு போவதாக அடிக்கடி புகார் எழுந்த நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அது அருண்குமார் என்று தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், "அருண்குமார், உயர் ரக கார்களை தேர்ந்தெடுத்து, அதன் கண்ணாடிகளை உடைத்து, ஸ்டீயரிங் வீலுக்கு அடியில் உள்ள சாதனத்தை இணைத்து, பூட்டைத் திறக்க பயன்படும் சாப்ட்வேரைப் பயன்படுத்தி கார்களை திருடி வந்துள்ளார். அப்படி திருடிய கார்களை தமிழ்நாடு, ஆந்திரம் என்று பல மாநிலங்களுக்கு எடுத்து சென்று, போலியான பதிவு சான்றிதழ் மூலம் குறைந்த விலைக்கு விற்று வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அருண்குமாரிடம் இருந்து ரூ.70 லட்சம் மதிப்புள்ள பத்து கார்கள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் திருடி விற்ற பணத்தை கோவாவிலுள்ள சூதாட்ட விடுதிகளில் செலவழித்து வந்துள்ளார்" என்று கூறினார். இணையத்தை பார்த்து உயர் ரக கார்களை திருடி குறைந்த விலையில் விற்று வந்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வேலை வாங்கி தருவதாக பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி.. LIVE வீடியோவில் அம்பல படுத்திய பெண்