India

“மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை” : வெளியான பகீர் வீடியோ - வழக்கில் மூவர் கைது!

புதுச்சேரி அருகே பூரணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (38). ஆட்டோ ஓட்டுநரான, இவர் கடந்த 7-ந் தேதி கடன் தொல்லையால் தனது மனைவி பச்சைவாழி, மகள், மகனை கொன்று விட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரியாங்குப்பம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தியாகராஜன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது செல்போனில் பேசிய வீடியோ அவர்களது உறவினர்களுக்கு கிடைத்தது. அதில், தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் மரணத்திற்கு 3 பேர் தான் காரணம் என அந்த வீடியோவில் இருந்தது.

இதனை ஆதாரமாக, தியாகராஜனின் அண்ணன் மதியழகன் அரியாங்குப்பம் போலிஸில் கொடுத்தார். அந்த வீடியோவில், கடன் கொடுத்தவர்கள் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததால் தியாகராஜன் குடும்பத்துடன் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக, அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருந்த தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த ஏலச்சீட்டு நடத்திவரும் டெய்லர் ராமச்சந்திரன் (40), ஆட்டோ டிரைவர்களான பூரணாங்குப்பத்தை சேர்ந்த முத்து (45), தானாம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (38) ஆகியோரை பிடித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

தியாகராஜன் கேட்கும் போதெல்லாம் இவர்கள் பணம் கொடுத்துள்ளனர், பின்னர் ஒரு கட்டத்தில் கடனை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலிஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Also Read: காவல்துறை நடுநிலையோடு செயல்பட்டது.. பழனிச்சாமி கூட்டம் பாராட்ட வேண்டாம்; பழி சுமத்துவதை நிறுத்தட்டும்!

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”