India

ஆம்புலன்ஸ் கொடுக்காததால் இறந்த தம்பி உடலை மடியில் வைத்து அமர்ந்திருந்த சிறுவன்.. ம.பி-யில் நடந்த சோகம் !

மத்திய பிரதேச மாநிலம் அம்பா பத்ரா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் புஜாராம். இவருக்கு குல்ஷன் என்ற 8 வயது மகனும், ராஜா என்ற 2 வயது மகனும் உள்ளனர். இதில் 2 வயது மகன் ராஜாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இதன் காரணமாக ராஜாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவருடன் அவரின் மூத்த மகன் குல்ஷனும் சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனையில் 2 வயது மகன் ராஜா இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரும் வருத்தம் அடைந்த புஜாராம், தனது மகனை, சொந்த ஊருக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துதருமாறு மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை மருத்துவமனை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

இதன்பின்னர், புஜாராம் தனது மகனின் சடலத்தோடு, மருத்துவமனையில் இருந்து வெளியேறி சாலையில் அமர்ந்துள்ளார். பின்னர் வேறு வாகனம் கிடைக்கிறதா என்று பார்க்க புஜாராம் தனது 2 வயது மகனின் சடலத்தை 8 வயது மகனிடம் கொடுத்துச்சென்றுள்ளார். 8 வயது மகன் குல்ஷன் தன் இறந்த சகோதரனின் உடலை மடியில் வைத்துக்கொண்டு அரை மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்த நிலையில், அவருக்கு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இறந்த சகோதரனின் உடலை மடியில் வைத்துக்கொண்டிருந்த சிறுவனின் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத்தளத்தில் எழுந்துள்ளது.

Also Read: “நாளைக்கு மீண்டும் வருவேன்” : பட்டாக் கத்தியுடன் அரசு பள்ளிக்கு வந்து எச்சரிக்கை விடுத்த தந்தை ! (Video)