India

அமராவதி படுகொலையிலும் நுபுர் ஷர்மா சர்ச்சை.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

மகாராஷ்டிரா மாநிலம், அமராவதி பகுதியை சேர்ந்தவர் உமேஷ் கோல்ஹே (54). இவர் அங்கே மருந்துக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூன் 21 ஆம் தேதி, தனது வேலையை முடிந்துவிட்டு வீடு திரும்பியபோது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை வழிமறித்து ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கினர்.

இதில் இரத்த வெள்ளத்தில் விழுந்த கிடந்த உமேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது இது தொடர்பான சிசிடிவி பதிவு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சம்பவம் நடந்த நாளன்று இரவு 10 மணியளவில், உமேஷ் கோல்ஹேவின் மனைவியும், 27 வயதுடைய மகனும் ஒரு வாகனத்தில் செல்ல, மற்றொரு வாகனத்தில் உமேஷ் கோல்ஹே செல்லும்போது அவர்களை யாரோ பின் தொடரும் காட்சி் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சியை அடிப்படையாகக்கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், 12 நாட்களில் 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து விசாரித்தனர். அப்போது, நுபுர் ஷர்மா கூறிய கருத்துக்கு ஆதரவாக அந்த மருந்து கடைக்காரர் பதிவிட்டதால் அவரைக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் ராஜன்தானிலுள்ள உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல் கடைகாரர் ஒருவரை பொதுவெளியில் வைத்து தலையை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரியாஸ் மற்றும் கவுஸ் முகமது என்பவர்களை கைது செய்து விசாரிக்கையில், பா.ஜ.க நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டதாலும், முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசியதாலும் அவரை கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தனர்.

நாட்டில் நடைபெறும் வன்முறைகளுக்கு தனி நபராகக் காரணமாகியுள்ள நுபுர் ஷர்மா, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: உலக புகழ்பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் : 90s kids பொழுதுபோக்கு.. அழிவின் விளிம்பில் சர்க்கஸ் கலை !