India

பிரதமரை நாங்கள் வரவேற்க மாட்டோம்.! - அதிரடி காட்டிய தெலங்கானா முதலமைச்சர்.. காரணம் என்ன ?

பா.ஜ.க. சார்பில் நடைபெறும் தேசிய செயற்குழு பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்திற்கு இன்று வருகிறார். இன்று, நாளை ஆகிய இரு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்ளிட்ட 18 மாநில பா.ஜ.க. முதல்வர்கள், மூத்த நிர்வாகிகள் என பலரும் பங்கேற்கின்றனர்.

இன்று காலை தொடங்கிய இந்த நிகழ்ச்சி, ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச மாநாட்டு திடலில் நடைபெற்று வருகிறது. இதனை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். இதில் தென் மாநிலங்களில் பா.ஜ.க.வை வலிமைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பிரதமர் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம், "#GOBACKMODI" ட்ரெண்ட் ஆவது போல், இவரின் வருகையை முன்னிட்டு, ஐதராபாத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. வழக்கமாக ட்ரெண்ட் செய்வதோடு விடும் மக்கள், இந்த முறை ஒரு படி முன்னேறி, பெரிய அளவில் பேனர் வைத்து தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

அதாவது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்த வெப் சீரீஸான Money Heist போஸ்டர் பாணியில், “Mr N Modi, we only rob bank, you rob the whole nation” என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. அதாவது "நாங்கள் வங்கியைத்தான் கொள்ளை அடிக்கிறோம், ஆனால் பிரதமர் மோடி நீங்கள் நாட்டையே கொள்ளை அடிக்கிறீர்கள்" என இருந்தது.

இது தொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த தெலுங்கானா ராஷ்ட்ரிய ஸமிதி கட்சியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஒய்.சதீஸ் ரெட்டி பகிர்ந்திருந்தார். இது இந்திய அளவில் வைரலான நிலையில், பா.ஜ.க. ஆதரவாளர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

வழக்கமாக தங்கள் மாநிலத்திற்கு வரும் பிரதமரை அந்த மாநில முதலமைச்சர் அவரை நேரடியாக விமான நிலையத்தில் சென்று வரவேற்பர். இருப்பினும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இம்முறையும் பிரதமர் மோடியை வரவேற்க செல்ல மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. அதே போல், பிரதமரை அம்மாநில முதலமைச்சர் வரவேற்க செல்லவில்லை.

ஆனால் மோடி வருகைக்கு முன்னர் தெலங்கானாவுக்கு வருகை தந்த எதிர்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேரில் சென்று வரவேற்றார். ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக செயல்படுவதில் தீவிர முனைப்பு காட்டி வரும் தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடியை வரவேற்க செல்லாதது இது 3-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: புதையலில் பழங்கலாத்து நகைகள்.. ஓட்டல் உரிமையாளருக்கு விபூதி அடித்த வட மாநில தொழிலாளர்கள் !