India

ஓடும் காரில் நடந்த சோகம்.. தாய் மற்றும் 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர கும்பல்!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரை சேர்ந்த பெண் ஒருவர், தனது 6 வயது மகளுடன் நேற்றைய முன்தினம் இரவு தனியே தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுடன் காரில் வந்த அந்த பெண்ணுக்கு தெரிந்த சோனு என்ற நபர், அந்த பெண்ணிடம் அவர்களை வீட்டின் அருகே பத்திரமாக இறக்கி விடுவதாக கூறினார்.

முதலில் வேண்டாம் என்று மறுத்த அந்த பெண், இரவு நேரம் என்பதால் அவருடன் செல்ல ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஏற்கனவே காருக்குள் இருந்த சோனுவின் நண்பர்கள், ஓடும் காரில் அந்த பெண்ணையும் அவரது 6 வயது மகளையும் கும்பலாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் ஒரு ஏரியின் அருகே வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து செய்வதறியாது திகைத்த அந்த பெண், இரத்த வெள்ளத்தில் இருந்த தனது குழந்தையுடன் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கே நடந்த சம்பவத்தை கூறி புகாரும் அளித்துள்ளார்.

அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது மகளையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, அதனடிப்படையில் சோனு மற்றும் அவரது கும்பலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இந்த குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை தற்போது காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைந்துள்ளனர்.

தாயையும், 6 வயது சிறுமியையும் ஓடும் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை: பயன்பெறுவதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி?