India

“ஆபரேசன் தாமரை.. நானும் இதை அனுபவப்பட்டு இருக்கிறேன்” : பாஜகவின் குதிரை பேர அரசியலை தோலுரித்து குமாரசாமி!

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் எப்படியாவது காலுன்றவிட வேண்டும் என பல்வேறு குறுக்குவழியை ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கோவா, மத்திய பிரதேசம், கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் குதிரைபேரத்தின் மூலம் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

அந்தவரிசையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியை கலைக்க பா.ஜ.க சதி செய்து வருவதாக அம்மாநில முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிற கட்சிகள் ஆட்சி செய்வதை பொறுக்க முடியாத பா.ஜ.க, நாட்டில் கேவலமான அரசியலை செய்து வருவதாகவும், நாட்டில் அரசியலமைப்பு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய் விட்டதாகவும் எச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைமையகமான ஜே.பி. பவனில், அக்கட்சியின் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “‘ஆபரேசன் தாமரை’ என்ற திட்டத்தை பா.ஜ.க-வை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கொண்டு வந்தார். இந்த ஆபரேசன் தாமரை திட்டத்தின் கீழ் மாநில அரசைக் கவிழ்த்து பா.ஜ.க ஆட்சி அமைக்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கினார்கள்.

பா.ஜ.க-வின் அதிகார தாகம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களில் எந்த அரசும் பா.ஜ.க-வின் அதிகார தாகத்துக்கு முன்னாள் நிற்க முடியாது. பெரும்பான்மையாக வெற்றிபெற்ற கட்சிகளைக் கூட ஆட்சியமைக்க பா.ஜ.க அனுமதிக்காது.

தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா எம்எல்ஏ-க்கள் ஆளும் சிவசேனா அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்று கூறுவதாக பா.ஜ.க சொல்கிறது. மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தை வைத்து ஒருதரப்பு கேவலமான அரசியலை செய்து வருகிறது என்றால் அது வேறு யாருமல்ல பா.ஜ.க கட்சிதான். அதில் எந்தவிதமான சந்தேகமும் எனக்கு கிடையாது.

கர்நாடகத்தில் நானும் இதை அனுபவப்பட்டு இருக்கிறேன். கர்நாடகாவில் நான் முதலமைச்சராக இருந்தபோது எம்.எல்.ஏக்களை நம்பவில்லை என்று பா..ஜக குற்றம்சாட்டியது. சட்டமன்ற உறுப்பினர்கள் முறையாக நடத்தப்படவில்லை என்ற பொய் பிரச்சாரத்தை அவர்கள் கையில் எடுத்தனர்.

நான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்காக மட்டுமே ரூ. 19 ஆயிரம் கோடியை ஒதுக்கினேன். அந்த பட்டியலையும் கட்சியின் சட்டமன்றத் தலைவரிடம் வழங்கினேன். எப்படியோ ஒரு வழியாக பா.ஜ.க அரசியல் செய்து ஆபரேசன் தாமரையை நடத்தி எனது அரசைக் கலைத்து விட்டது.

இன்று மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்துக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது. நாடு முழுவதும் அவதூறுகளை அக்கட்சி பரப்பி வருகிறது. இந்தியாவில் இன்று அரசியலமைப்பு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கண்ணாடி பாட்டில்களில் கண்டெடுக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள்.. நெஞ்சை பதற வைக்கும் பகீர் புகைப்படங்கள் !