India

கண்ணாடி பாட்டில்களில் சிசுக்களின் சடலங்கள்.. கர்நாடகாவை நடுங்க வைத்த அதிர்ச்சி சம்பவம்!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் கிடந்துள்ளது. இதனை அங்கு துணிகளை துவைக்க வந்த சிலர் கண்டு அது குறித்து போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலிஸார், கண்ணாடி பாட்டில்களை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே இடத்தில் கலைக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள் கிடைத்தது கர்நாடகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த தொகுதி எம்.எல்.ஏ. பாலச்சந்திர ஜர்கிஹோலி , இதுபோன்ற நிகழ்வுகள் பொதுச் சமூகத்திற்கு பெருத்த அவமானம் என கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத கருக்கலைப்புக்கு தடை இருக்கும் சூழலில் இது போன்ற கருக்கலைப்புகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பிரபல பரோட்டா கடைக்கு சீல்.. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை - பின்னணி என்ன?