India

“எலெக்ட்ரிக் வாகனங்கள் என்றாலே அப்படிதான்..” : தீ விபத்து குறித்து OLA நிறுவனத்தின் கருத்தால் சர்ச்சை !

உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், உலகில் அதன் இருப்பு குறைத்து வருவதும் பொதுமக்களை மாற்று எரிவாயு தொடர்பாக சிந்திக்க வைத்தது. இந்த நிலையில் இதற்கு மாற்றாக வந்த எலெக்ட்ரிக் வாகனங்களை பல்வேறு தரப்பினரும் வரவேற்று வருகின்றனர்.

உலகெங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு கிடைத்த வரவேற்பு இந்தியாவிலும் கிடைத்தது. இதன் காரணமாக டாடா, மஹிந்திரா, ஓலா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கி வருகின்றன.

ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து தீ பிடித்து எரிந்து வருவது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வுகளுக்கு காரணம் தரமான பொருள்கள் எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தாததே என தெரியவந்தது.

இந்த நிலையில் மும்பை புறநகர் பகுதியில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்றை கமல் ஜோஷி என்பவர் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

இந்தப் பதிவை ரீட்வீட் செய்துள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால், "எலக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்துகள் ஏற்படும். அனைத்து உலகளாவிய தயாரிப்புகளிலும் நிகழ்கிறது. எலக்ட்ரிக் வாகனங்களில் தீயானது ICE தீயை விட மிகவும் குறைவாகவே உள்ளது." என பதிவிட்டுள்ளார்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் என்றாலே தீப்பிடிக்கும் என்ற ரீதியில் ஓலா நிறுவனத்தின் சி.இ.ஓ கூறியுள்ளது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரின் ட்வீட்க்கு பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: கணவர்களே உஷார்.. “பொம்மையை திருமணம் செய்து குழந்தை பெற்ற இளம்பெண்” : காரணம் என்ன தெரியுமா?