India

“தங்கத்தை கடத்திச் சென்ற எலிகள்.. தங்கத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?” - மும்பையில் விசித்திர சம்பவம்!

மும்பையில் வீட்டு வேலை செய்யும் 45 வயதுடைய பெண் ஒருவர், தான் வாங்கிய கடனை அடைக்க தனது நகையை அடமானம் வைப்பதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார். செல்லும் வழியில் தவறுதலாக நகைப்பையில் உணவை வைத்து அதே பகுதியில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார்.

சிறிது தூரம் சென்ற பிறகே நகை வைத்திருந்த பையில் உணவை கொடுத்தது அவருக்கு ஞாபகத்துக்கு வந்துள்ளது. இதன் பின்னர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற அந்த குழந்தைகளை தேடியுள்ளார். ஆனால், அவர்கள் அங்கு இல்லாததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் இந்த வழக்கு தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தினர். அதில் உணவு வாங்கிய குழந்தைகளை கண்டுபிடித்த போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அந்த பெண் கொடுத்த உணவு சாப்பிட முடியாமல் இருந்ததால் அதை குப்பையில் போட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். அதன் படி அந்த குப்பை தொட்டியை தேடியபோது அங்கு பை காணாமல் போயுள்ளது.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலிஸார் ஆராய்ந்தனர். அதில் ஒரு சில எலிகள் அந்த பையை குப்பைக் கிடங்கிலிருந்து ஒரு சாக்கடைக்கு எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.

இதனால் போலிஸார் சாக்கடை கால்வாயை திறந்து பார்த்தப்போது அங்கே அந்த பை இருந்ததும் அதில் நகைகள் பத்திரமாக இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து அதை மீட்ட போலிஸார் அதை அந்த பெண்ணிடம் ஒப்படைத்தனர். இந்த நகையின் மதிப்பு 5 லட்சம் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

Also Read: "இளைஞர்கள் உழைப்பது பா.ஜ.க அலுவலகத்தை காவல் காக்க அல்ல".. கொதித்தெழுந்த டெல்லி முதல்வர்!