India

”அக்னிபாத் விவாதத்தில் பங்கேற்க உங்களுக்கு இடம் இல்லை”: ஆளுநருக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். முக்கியமாக வட மாநிலங்களில் தீவிரமாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்களுக்குத் தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதுமட்டுமல்லாது பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசிய பா.ஜ.க தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களை சூறையாடித் தீ வைத்துள்ளனர்.

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவது கண்டனத்துக்குரியது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அக்னிபாத் திட்டம் புரட்சிகரமான திட்டம் என்றும், இந்த திட்டத்தால் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை, சுய ஒழுக்கத்தை மேம்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்திற்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டரில், "'அக்னிபாத்' திட்டம் ஓர் அரசியல் முடிவு. இன்று சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சனையாக உருவாகிவிட்டது. இதில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுனர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல.

மேலும், உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டுச் சக்திகளும் இளைஞர்களுக்குத் தவறான வழியைக் காட்டுகிறார்கள் என்று சொல்வது அறவே ஏற்புடையதல்ல. இந்தப் பிரச்சனைக்கு அமைதியான போராட்டம் மூலமாகவும் விரிவான விவாதம் மூலமாகவும் தான் தீர்வு காணவேண்டும். இந்த விவாதத்தில் ஒரு மாநில ஆளுனர் பங்கேற்பதற்கு இடம் இல்லை" என தெரிவித்துள்ளார்.

Also Read: தாயை விட கேமராமேனுக்கு முக்கியத்துவம் கொடுத்தாரா மோடி? : இணையத்தில் வைரலாகும் சர்ச்சை வீடியோ!