India

காலில் சூனியம் இருக்கு.. தேங்காய் எண்ணெய் கொடுத்து நகை, ரூ.8,500 சுருட்டல்; போலி சாமியார்கள் துணிகரம்!

புதுச்சேரி அருகே கோர்க்காடு எல்லை அம்மன் நகரை சேர்ந்தவர் லட்சுமி (43). கணவரை இழந்த இவர் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். நேற்று லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது சாமியார் போல் உடை அணிந்திருந்த 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள், லட்சுமிக்கு காலில் அடிபட்டதை கூறி, உனக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர். அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் வீட்டில் உள்ள தங்க நகைகளை மந்திரித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினர்.

இதை நம்பிய லட்சுமி, தனது கையில் போட்டிருந்த 2 பவுன் வளையல்கள், காதில் அணிந்திருந்த தங்கத்தோடு ஆகியவற்றை அவர்களிடம் கழற்றி கொடுத்தார். அதன்பின் மூலிகை கலந்த தேங்காய் எண்ணெயை கொடுத்து ரூ.20 ஆயிரத்தை அவர்கள் கேட்டுள்ளனர். லட்சுமி தன்னிடம் ரூ.8,500 மட்டுமே இருப்பதாக கூறி அந்த ஆசாமிகளிடம் கொடுத்துள்ளார்.

இதையெல்லாம் வாங்கிக் கொண்ட அந்த ஆசாமிகள் மந்திரம் சொல்வது போல் நடித்து ஒரு செம்பை கொடுத்து அதில் நகைகள் இருக்கின்றன. நாளை அதை திறந்து நகைகளை எடுத்துக் கொள்ளுமாறு கூறி விட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிலையில் வீட்டுக்கு வந்த மகன் விக்னேசிடம், நடந்த விவரம் குறித்து லட்சுமி தெரிவித்தார். உடனே அவர் செம்பை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் எதுவும் இல்லை. இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்கு வந்த மர்ம ஆசாமிகள் சாமியார்போல் நடித்து நகை, பணத்தை பறித்துச்சென்றது தெரிய வந்தது.

இது குறித்து மங்கலம் போலிஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், மோட்டார் சைக்கிளில் 2 பேர் காவி வேட்டி அணிந்து லட்சுமி வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து வில்லியனூர் பகுதியில் காவி வேட்டியுடன் நடமாடிய 8 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலிஸார் விசாரித்தனர். அதில் ஒருவர் லட்சுமியிடம் நூதன முறையில் நகை பறித்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவரது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோர்க்காடு அருகே உள்ள புதுக்குப்பம் பகுதியிலும் இதேபோல் ஒரு பெண்ணிடம் மர்மநபர்கள் நகை பறித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Also Read: 2 பல்புக்கு ரூ.2.5 லட்சம் கரண்ட் பில்லா ?.. மின்சார கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெயிண்டர்!