India

கைவிட்ட கணவன்.. உயிரிழந்த அங்கன்வாடி ஊழியரை அடக்கம் செய்ய கை கொடுத்த சக ஊழியர்கள்: ஆந்திராவில் நெகிழ்ச்சி

உடல்நிலை குறைவால் உயிரிழந்த அங்கன்வாடி ஊழியரின் இறப்பை உறவினர்களே கண்டுகொள்ளாத நிலையில் மனிதநேயத்துடன் சக ஊழியர்கள் இறுதி சடங்கு முடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அன்னம் சௌமியா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சௌமியா உடல் நிலை சரியில்லாததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

குடும்ப தகராறு காரணமாக கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த சௌமியா உடல்நிலை குறைவாக இருந்தாலும் அவருக்கு உதவி செய்வதற்காக கணவன் மற்றும் உறவினர்கள் யாரும் முன் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து சௌமியாவின் உடலை பெற்றுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள் சடலத்தை ஒரு நாள் முழுவதும் மயானத்தில் வைத்து உறவினர்களுக்காக காத்திருந்த நிலையில் அவரது உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பதால் உடன் பணியாற்றிய அங்கன்வாடி ஊழியர்களே மனிதநேயத்துடன் சௌமியாவின் உடலை சுமந்து சென்று இறுதிச்சடங்கு முடித்து வைத்தனர்.

உடல்நிலை குறைவால் இறந்த சௌம்யாவுக்கு உறவினர்கள் மற்றும் கணவர் இருந்தபோதிலும் யாரும் முன்வராததால் சக ஊழியர்கள் இறுதிச்சடங்கு முடித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “சாப்பிட காசு கேட்ட 6 வயது சிறுவன் கழுத்து நெரித்து கொலை” - மத்திய பிரதேச காவலர் வெறிச்செயல் !