India

தலைக்கேறிய போதை.. மதுக்கடை மீது நாட்டு வெடிகுண்டு வீசிய அராஜக கும்பல்.. புதுச்சேரியில் பரபரப்பு!

புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு நேற்று இரவு மூன்று மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். கடையின் படிக்கட்டில் நாட்டு வெடிகுண்டு விழுந்ததால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், திருச்சியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் இந்த மதுபானக் கடையில் சப்ளையராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குபேர் நகரை சேர்ந்த சச்சின், நடேசன் நகரை சேர்ந்த எழில், தென்னல் நகரை சேர்ந்த பிரதாப், கெளதம் ஆகிய நான்கு பேரும் மது அருந்தியுள்ளனர்.

மதுபோதை தலைக்கேறிய நிலையில், அங்கிருந்த சேர்களை உடைத்துள்ளனர். இதனை சசிகுமார் மற்றும் குமரேசன் ஆகியோர் கேள்வி கேட்டபோது அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த சச்சின், எழில், பிரதாப் உள்ளிட்டோர் சசிகுமார் மற்றும் குமரேசனை பீர் பாட்டிலால் தாக்கி உள்ளனர். இதனை அங்கிருந்தவர்கள் தடுத்ததால் 4 பேரும் தப்பியோடிவிட்டனர்.

ஆத்திரத்தில் இருந்த 4 பேரும் நேற்று இரவு வெடிகுண்டை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து உருளையன்பேட்டை போலிஸார் சிசிடிவி காட்சிகளை கொண்டு நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ஓடும் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட பயணி: சென்னை மவுன்ட் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன? பொதுமக்கள் அதிர்ச்சி!