India

வருங்கால கணவர் மீது மோசடி புகார்.. ஆதாரங்களை திரட்டி அதிரடியாக கைது செய்த பெண் காவலர்: குவியும் பாராட்டு!

அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜூன்கோனி ரபா. இவர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அவரது பெற்றோர்கள் திருமணத்திற்காக வரன் தேடி வந்துள்ளனர். இதற்காக திருமண மேட்ரிமோனியிலும் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து ராணா போஹாட் என்பவர் மேட்ரிமோனி வழியாக ஜுன்மோனிக்கு அறிமுகமாகியுள்ளார். மேலும் அரசு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பதாகவும் அவரிடம் கூறியுள்ளார். இதை நம்பிய ஜுன்மோனியும், ராணா போஹாட்டுடன் பேசி பழகிவந்துள்ளார்.

பிறகு இருவீட்டாரும் சேர்ந்து திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மேலும் இந்த வருடம் நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையில் ஜுன்மோனிக்கு ஒரு தொலைபேசி வந்துள்ளது. அதில் 'நீங்கள் திருமணம் செய்யப் போகும் ராணா போஹாட் ஒரு மோசடியாளர்' என கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் ராணா மீது ஜுன்மோனிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது வேலைபற்றி அவரிடம் கேட்டபோது ராணா முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் அவரின் சந்தேகம் இன்னும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து அவருக்கு தெரியாமலே ராணா குறித்து ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனத்தின் உயர் அதிகாரி எனக் கூறி கொண்டு, பலரிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக் கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் இதுபோன்று மேகாலயா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ராணா மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இதற்கான முழு ஆதாரங்களைத் திரட்டி ஜுன்மோனிக் நேற்று தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர் என்றும் பாராமல் ராணா போஹாடை அதிரடியாகக் கைது செய்துள்ளார். பணமோசடியில் ஈடுபட்டவர் வருங்கால கணவர் என்றும் பாராமல் கைது செய்த உதவி காவல் ஆய்வாளர் ஜுன்மோனி ரபாவுக்கு காவல்துறையின் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also Read: ஜன்னலை எட்டிப்பார்த்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை: 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாப பலி!