India

போதை பொருட்களை கடத்துவதற்கு புகலிடமாக மாறிய குஜராத்.. ரூ.1,500 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!

குஜராத் மாநிலம், கண்ட்லா துறைமுகத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS)க்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ATS மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் இணைந்து கண்ட்லா துறைமுகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது போதைப் பொருட்களுடன் கூடிய சரக்கு பெட்டகம் ஒன்று கிடைத்துள்ளது. இதை சோதனை செய்தபோது ரூ.1,500 கோடி மதிப்பில் 260 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இந்த போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக அனுப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மை காலமாகவே குஜராத் துறைமுகங்களை பயன்படுத்தி போதைபொருள்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கூட முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.2,100 கோடி மதிப்பிலான 3 டன் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் குஜராத் கடல் பகுதிக்கு வந்த 750 கிலோ போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடந்த 2017ம் ஆண்டின்போதும் ரூ30,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இப்படி அடுத்தடுத்து குஜராத் துறைமுகங்களில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போதைப் பொருட்களை கடத்துவதற்கு கடத்தல்காரர்களுக்கு குஜராத் கடல் பகுதி விருப்பத் தேர்வாக இருக்கிறது என்பதை இத்தகைய சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன என சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: "ஊசி சிரிஞ்சிற்குள் போதை சாக்லேட்டா?" - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!