India

நிச்சயதார்த்தத்திற்கு மண்டபம் புக் செய்ய சென்ற தந்தை, மகளுக்கு நேர்ந்த சோகம் : உறவினர்கள் அதிர்ச்சி!

பெங்களூருவைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகள் சைதன்யா. இவரது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக மண்டபம் ஒன்றை முன்பதிவு செய்ய தந்தையும், மகளும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் மங்கனஹள்ளி என்ற பகுதியில் சென்றபோது சாலையிலிருந்த மின்சார டிரான்ஸ்ஃபார்மர் வெடித்துள்ளது. அப்போது அதிலிருந்து சிதறிய தீப்பொறி இவர்கள் மீதும் பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பெற்றுவந்த சில மணி நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துள்ளார். மேலும் மகள் அடுத்தநாள் இறந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது டிரான்ஸ்ஃபார்மில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு வருவதாக மின்சார ஊழியர்களுக்குத் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்த விபத்து நடந்துள்ளது என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து உதவி பொறியாளர் தினேஷ் மற்றும் ஜூனியர் இன்ஜினீயர் மகந்தேஷ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து அன்றைய தினமே போலிஸார் ஜாமீனில் விடுவித்துள்ளனர். போலிஸாரின் இந்த செயலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Also Read: தோழியை கொலை செய்து உடலை பிளாஸ்டிக் பையில் கட்டி வீசிய பெண் - ‘பகீர்’ சம்பவம் : பின்னணி என்ன?