India

பார்சல் மட்டுமே தந்ததால் தகராறு.. கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட நபர் - ஒருவர் பலி : கேரளாவில் பயங்கரம்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிலிப் மார்ட்டின் (34). வெளிநாட்டில் வேலை செய்துவந்த இவர் நாடு திரும்பி கேரளாவில் இருந்து வருகிறார். இந்நிலையில் மார்ட்டின் தனது நண்பர்களுடன் அசோகா விலக்கு பகுதியில் உள்ள ரோட்டுக்கடையில் நண்பர்களுடன் சாப்பிடச் சென்றுள்ளார்.

அப்போது கடைக்காரப் பெண்மணி, பார்சல் கேட்டவர்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மார்ட்டின் கடைக்காரரிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது கடைக்காரர்களின் ஆதரவாளர்கள் சிலர் மார்ட்டினை தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மார்ட்டின் வீட்டிற்குச் சென்று வீட்டிலிருந்த இரட்டைக்குழல் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்றுள்ளார்.

துப்பாக்கியோடு வந்த மார்ட்டினை கண்டு அங்கிருந்தோர் கற்களை வீசி தாக்குதல் நடத்தத் தொடங்கியதும், தான் எடுத்துவ ந்திருந்த துப்பாக்கியைக் கொண்டு சுட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வாகனத்தில் வந்த சனல் பாபு, பிரதீப் புஸ்கரன் ஆகியோர் மீது குண்டுபட்டுள்ளது. இதில், சனல்பாபு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பிரதீப் புஸ்கரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், மார்ட்டினை கைது செய்து அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் துப்பாக்கி மற்றும் குண்டுகள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வீட்டு ஓனருக்கு தெரியாமல் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.12 லட்சம் ‘அபேஸ்’ - இளம்பெண்ணின் நூதன திருட்டு!