India

சீரியல் பார்த்ததைக் கண்டித்த கணவனை கம்பியால் தாக்கிய மனைவி : பார்வை இழந்த சோகம்!

மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் சோனி. இவரது மனைவி தினந்தோறும் வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் அதிக நேரம் டி.வி-யில் சீரியல் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கண்டித்து டி.வி பார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். இருந்தபோதும் அவர் தொடர்ச்சியாக டி.வி பார்ப்பதை குறைக்கவில்லை.

இந்நிலையில், கடந்த ஹோலி பண்டிகையன்று கணவன் மனைவிக்கு இடையே டி.வி பார்ப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனைவி வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சஞ்சய் சோனியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவரது இடது கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது மனைவி வீட்டிலிருந்த நகை மற்றும் பணங்களை எடுத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கணவர் சஞ்சய் சோனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, சஞ்சய் சோனியின் மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். டி.வி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் மனைவியே கணவனைத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: புகைப்பிடித்த சிறுவன் அடித்துக் கொலை.. உடலை ரோட்டில் வீசிய கொடூரம் : டெல்லியில் நடந்த ‘பகீர்’ சம்பவம் !