India

”வெறுப்பு பேச்சை ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும்” - மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூர் பேச்சு!

வழக்கறிஞர்கள், சட்டத்துறை மாணவர்களுக்கான ஆன்லைன் கருத்தரங்கம் ஒன்றில் நீதிபதி மதன் லோகூர் உரையாற்றியிருந்தார். அப்போது, “வெறுப்பு பேச்சுக்கள் வன்முறையாக மாறி ஒடுக்கப்பட்டோர் மீது தாக்குதல் நடத்தவும், சிலர் மீது பாகுபாடு காட்டவும், அடித்தளமாக அமைகிறது.

வெறுப்பு பேச்சு இனப்படுகொலைக்கு இழுத்துச் செல்லும் ஆபத்து உள்ளது. 2012 ஆம் ஆண்டு அசாமில் பரப்பப்பட்ட வெறுப்புணர்வால் வன்முறை ஏற்பட்டு 50 ஆயிரம் பேர் தங்களது சொந்த மாநிலங்களுத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

இணையதளங்கள் மூலம் இஸ்லாமியப் பெண்கள் மீது வன்முறைகள் ஏவப்படுகிறது. குறிப்பிட்ட பள்ளிகள் மீது தாக்குதல், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல்நாள் சான்டா கிளாஸ் உருவ பொம்மை எரிப்பு இவை எல்லாமே வெறுப்பு பேச்சால் தூண்டப்பட்ட வன்முறைகள்தான்.

டெல்லியில் ஒரு அமைச்சர் துப்பாக்கியால் சுடுங்கள் என்று பேசுகிறார். இது கொலை செய்யத் தூண்டுவது இல்லையா? என்று மதன் லோகூர் பல சம்பவங்களைக் குறிப்பிட்டார்.

மேலும், வெறுப்பு பேச்சை தடுக்க அரசு எதுவும் செய்யவில்லை, நீதிமன்றங்களும் ஒரு சில நேரங்களில்தான் தலையிடுகின்றன. எனவே, வெறுப்பு பேச்சுக்கு எதிராக அனைவரும் அணிவகுத்து, ஒரு பொது கருத்தை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Also Read: “ஸ்டாலின் அரசு” : அடுத்த தலைமுறையும் பேசும் சமூக நீதி - ஜீ தமிழ் நிகழ்ச்சியில் நெகிழவைத்த குழந்தைகள்!