India

படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை; வக்கிர ஆசாமி கைது; டெல்லியில் நடந்த பயங்கரம்!

நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் தொடர்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இப்படி இருக்கையில், வக்கிரவாதியின் இச்சைக்கு உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக மூதாட்டி பலிகடாவாக்கி இருக்கும் செயல் நெஞ்சை பதற செய்திருக்கிறது.

டெல்லியில் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது திலக் நகர். அங்கு 65 வயதுடைய முதிய பெண்மணியான ஒருவர் தன்னுடைய 87 வயது தாயாருடன் வசித்து வருகிறார்.

87 வயது மூதாட்டிக்கு வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போனதால் பல காலமாக படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் மூதாட்டியின் மகளான 65வயது பெண் வெளியேச் சென்றிருந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார் அடையாளம் தெரியாத நபர் ஒருவர்.

அப்போது, படுக்கையில் இருந்த மூதாட்டி யார் என கேட்க கேஸ் சர்வீஸ் செய்ய வந்திருப்பதாகக் கூறியிருக்கிறார். அந்த நபரின் செயலில் சந்தேகமடைந்த மூதாட்டி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரின் உதவியை நாட முயற்சித்திருக்கிறார்.

அப்போது, கதவை மூடிவிட்டு உடல்நலம் குன்றிய மூதாட்டி என்றும் பாராமல் அவரை அந்த நபர் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்த செல்போனையும் திருடிச் சென்றிருக்கிறார்.

பின்னர் வீட்டுக்கு திரும்பிய மூதாட்டியின் மகள், தனது தயார் காயமுற்று கிடப்பதை கண்டதோடு நடந்தவற்றை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்.

உடனடியாக இது தொடர்பாக போலிஸாரிடம் புகாரளித்திருக்கிறார். அதன்படி 16 மணி நேரத்தில் செல்போனை கைப்பற்றிய மேற்கு டெல்லி போலிஸாரை அதனை திருடிய 30 வயதான துப்புரவு தொழிலாளியையும் கைது செய்திருக்கிறார்கள்.

ஆனால் தனது வயது முதிர்ந்த தாயை வன்கொடுமை செய்தது தொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்யவில்லை என புகார்தாரர் குற்றஞ்சாட்டியதை அடுத்து அதன் மீது கைதானவர் மீது வழக்கு சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வு திலக் நகர் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதோடு நாட்டின் தலைநகரத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என எண்ணி கவலையுறுகின்றனர்.

Also Read: சென்னை மின்சார ரயிலில் பெண்களிடம் ஆபாச சைகை; ஒரேயொரு வீடியோவால் போதை ஆசாமியை கம்பி எண்ண வைத்த இளம்பெண்!