India

கொரோனா அவசர விமானம் விபத்து : விமானிக்கு ரூ.85 கோடி அபராதம் விதித்து ம.பி அரசு அராஜகம் - நடந்தது என்ன?

கொரோனா தொற்று பரவியதை அடுத்து, உலக நாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மாநில அரசுகள் தங்களுக்கு என்று தனியாக விமானங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. மேலும் தடுப்பூசி, கொரோனா மருத்துவ உபகரணங்களை எடுத்து வருவதற்கும் இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, மத்திய பிரதேச அரசும் கொரோனா பரிசோதனை கருவிகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல பீச் கிராஃப்ட் கிங் ஏர் பி250 ஜிடி என்ற விமானத்தைப் பயன்படுத்தி வந்தது. இந்த விமானத்தை கேப்டன் மஜித் அக்தர் என்பவர் இயக்கிவந்தார். துணை விமானியாக ஷிவ் ஜெய்ஸ்வால் மற்றும் நைப் தெசில்தார் திலீப் திவேதி ஆகியோர் இருந்தனர்.

இந்நிலையில், இந்த விமானம் கடந்த ஆண்டு மே மாதம் அகமதாபாத்தில் இருந்து குவாலியருக்கு சென்றது. பின்னர் குவாலியர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமான ஓடுதளத்தில் இருந்த தடுப்பின் மீது விமானம் மோதியதில் பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் கேப்டன் மஜித் அக்தர் உட்பட துணை விமானிகள் படுகாயமடைந்தது. இதையடுத்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், விமானத்தை சேதப்படுத்தியதாகக் கூறி விமானி மஜித் அக்தருக்கு ரூ. 85 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், அபராத தொகை செலுத்த முடியாது எனவும், அந்த விமான நிலையத்தின் ஓடுபாதையில் தடுப்பு இருப்பது குறித்து எனக்குத் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அபராத தொகையைச் செலுத்த மறுத்தால் மஜித் அக்தரின் விமானம் இயக்கும் உரிமத்தை ஓராண்டுக்கு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம். கொரோனா தொற்று காலத்தில் அரசுக்காக வேலை செய்து வருபவருக்கு எப்படி அபராதம் விதிக்கலாம் என மத்திய பிரதேச அரசுக்கு கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாதுகாக்கவும் ஏற்பாடில்லை; பரிசீலிக்க வழியுமில்லை -சு.வெங்கடேசன் அதிர்ச்சி