India

பைக் சைலென்சரை வைத்து மாணவர்கள் அட்டகாசம்; உருத்தெரியாமல் அழித்த உடுப்பி போலிஸ்!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் மணிப்பால் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அங்குள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர்களை வைத்து வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்கள்.

அதிலிருந்து வெளிவரும் ஓசை இளைஞர்களுக்கு ஆனந்தமாக இருந்தாலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அது தொந்தரவாகவே இருந்திருக்கிறது. ஏனெனில் முதியவர்கள் குழந்தைகள் இருப்பதால் இரைச்சல் மிகுந்த சத்தம் அப்பகுதி வாசிகளை எரிச்சலடைய வைத்திருக்கிறது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் போலிஸிடம் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 20 நாட்கள் தொடர்ந்து மணிபால் போலிஸார் வாகன சோதனை நடத்தியுள்ளனர். அதாவது ஜனவரி 5ம் தேதி முதல் ஜனவரி 25ம் தேதி வரை தொடர்ந்து நடத்திய வாகன சோதனையில் சுமார் 70க்கும் அதிகமான மோட்டார் சைக்கிள்களில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர்கள் பொருத்தி இருந்தது தெரியவந்தது. அவை விலையுயர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவைகளை பறிமுதல் செய்த போலிஸார் அதனை புல்டோசர் எந்திரத்தை பயன்படுத்தி அனைத்து சைலென்சர்களையும் அழித்தனர். இது சம்பந்தமாக உடுப்பி மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு விஷ்ணுவர்த்தன் நேரில் வந்து பார்வையிட்டு அவர் கண்முன்னே அனைத்து அதிக ஒலி எழுப்பும் சைலென்சர்களையும் அழித்தனர்.