India

வரலாற்றில் முதன்முறையாக 2,544 OBC மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பு பயிலும் வாய்ப்பு.. சாதித்த தி.மு.க!

வரலாற்றில் முதன்முறையாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 2,544 பேர் மருத்துவ மேற்படிப்பு பயிலும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

பல்வேறு தொடர் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க கடந்த ஆண்டு ஜூலை 29-ஆம் தேதி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

தமிழ்நாடு அரசு மற்றும் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் இந்த வழக்கில் இணைந்து கொண்டன. இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதியன்று இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்றும், அரசியல் சாசனப்படி இது சரியானதுதான் என்றும் தீர்ப்பளித்தது.

நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக, உச்சநீதிமன்ற வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டு, வாதிட்டு வென்றது தி.மு.க. தி.மு.க எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் சிறப்பாக வாதாடி இந்தத் தீர்ப்பைப் பெற்றுத் தந்தார்.

கடந்த பல ஆண்டு காலமாக தி.மு.க, அரசியல் களத்திலும் நீதிமன்றங்களிலும் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் விளைவாக, முதல் முறையாக அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓ.பி.சி இடஒதுக்கீடு இவ்வாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதன் காரணமாக கவுன்சிலிங் மூலம் அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ மேற்படிப்பு சீட் பெறும் 9,393 பேரில் 2,544 பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் இடங்களைப் பெறுகின்றனர்.

வரலாற்றில் முதன்முறையாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 2,544 பேர் மருத்துவ மேற்படிப்பு பயிலும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இது சமூக நீதி வரலாற்றில் மிகமுக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

Also Read: 27% இடஒதுக்கீடு தீர்ப்பு : ”இந்திய சமூக வரலாற்றில் மிக முக்கிய வெற்றி” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்