India
“பாக்கெட்ல 10 ரூபா இருக்கா? கார் வாங்க வந்தாராம்” : கிண்டல் செய்த சேல்ஸ்மேன்.. ஷோரூமை மிரளவைத்த விவசாயி!
‘நட்புக்காக’ என்ற திரைப்படத்தில் விஜயகுமாரும், சரத்குமாரும் கார் வாங்க ஷோரூமுக்கு செல்வார்கள். அப்போது அவர்களது பேச்சு, உடை பாவனையை பார்த்து ஷோரூம் ஊழியர்கள் கிண்டல் செய்வார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாக்கு மூட்டையில் கொண்டு வந்த பணத்தை கொட்டி விஜயகுமார் அதிர்ச்சி கொடுப்பார். இதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ராமனபாளையா கிராமத்தைச் சேர்ந்தவர் கெம்பேகவுடா. விவசாயி. இவர் நேற்று முன்தினம் துமகூரு டவுனில் உள்ள கார் ஷோரூமுக்கு கெம்பேகவுடா சென்றுள்ளார். அப்போது அவர் அழுக்கு உடை அணிந்து சென்றதாக தெரிகிறது.
கெம்பேகவுடாவிடம் ஷோரூம் ஊழியர்கள் இங்கு எதற்காக வந்தீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது விவசாய பொருட்களை எடுத்து செல்லும் வகையில் ஒரு சரக்கு வேனை வாங்க வந்துள்ளேன் என்று கெம்பேகவுடா கூறியுள்ளார். இதனால் சிரித்த ஷோரூம் ஊழியர்கள் உங்களிடம் 10 ரூபாய் உள்ளதா? சரக்கு வேன் வாங்க வந்திருப்பதாக கூறி காமெடி செய்கிறீர்களா? என்று கேட்டு கிண்டல் செய்துள்ளனர்.
அதற்கு கெம்பேகவுடா, தான் நிஜமாகவே சரக்கு வேன் வாங்கவே வந்துள்ளதாகக் கூறியுள்ளார். அப்போது ஷோரூம் ஊழியர்கள் உங்களுக்கு அரை மணி நேரம் தருகிறோம். அதற்குள் ரூ.10 லட்சத்தை கொடுத்துவிட்டு சரக்கு வேனை வாங்கி செல்லுங்கள் என்று கூறி சவால் விடுத்துள்ளனர்.
இந்த சவாலை ஏற்றுக்கொண்ட கெம்பேகவுடா கிராமத்தில் வசித்து வரும் தனது மாமாவான ராம ஆஞ்சநேயாவுக்கு செல்போனில் தொடர்புகொண்டு பேசி உடனடியாக ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஷோரூமுக்கு வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி ராமஆஞ்சநேயாவும் ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஷோரூமுக்கு சென்றார். பின்னர் அந்த பணத்தை ஷோரூம் ஊழியர்களிடம் கெம்பேகவுடா கொடுத்தார். இதனால் ஒரு கணம் ஷோரூம் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பின்னர் கெம்பேகவுடா, “நீங்கள் கூறியபடி அரை மணி நேரத்தில் ரூ.10 லட்சம் கொடுத்து விட்டேன் எனக்கு சரக்கு வேனை டெலிவரி செய்யுங்கள்” என்று கேட்டு உள்ளார். அப்போது பல்வேறு காரணங்களை கூறிய ஷோரூம் ஊழியர்கள் 2 நாட்கள் கழித்து சரக்கு வேனை டெலிவரி தருவதாக கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த கெம்பேகவுடா, ஷோரூம் முன்பு போராட்டம் நடத்தினார்.
இதுபற்றி அறிந்த திலக்பார்க் போலிஸார் அங்கு சென்று கெம்பேகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களிடம் அலட்சியமாக பேசிய ஷோரூம் ஊழியர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தங்களது தவறை உணர்ந்த ஷோரூம் ஊழியர்கள், கெம்பேகவுடாவிடம் மன்னிப்பு கேட்டனர். இதைத்தொடர்ந்து, விவசாயி கெம்பேகவுடா இந்த ஷோரூமில் தான் கார் வாங்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு, தான் கொண்டு வந்த 10 லட்சம் பணத்தை திரும்பி எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Also Read
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!