India

பசியால் சாலையில் தவித்த முதியவர் - தக்க நேரத்தில் உயிரைக் காப்பாற்றிய டிராஃபிக் போலிஸார்!

பசியால் வாடிய முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவரின் உயிரை காப்பாற்றிய போக்குவரத்து போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மணிக்கூண்டு பகுதியில் போக்குவரத்து போலிஸாரான விஜயகுமார், சத்யநாராயணா ஆகியோர் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையில் முதியவர் ஒருவர் பசியால் தவித்துக் கொண்டிருந்துள்ளார்.

அந்த வழியாகச் சென்றவர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்டுக் கொண்டிருந்தார். பலரும் கண்டும் காணாதது போல் சென்று கொண்டிருந்த நிலையில், விஜயகுமார், சத்யநாராயணா ஆகிய 2 போக்குவரத்து போலிஸாரும் கடையில் ஓஆர்எஸ் ஜூஸ் வாங்கி அவருக்கு கொடுத்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். உரிய நேரத்தில் முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததால், அவர் உயிர் பிழைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து ஆந்திர மாநில டி.ஜி.பி கவுதம் சவாங், சந்திரபாபு நாயுடுவின் மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் பொது செயலாளருமான லோகேஷ் உட்பட பலரும் பாராட்டி உள்ளனர்.

விஜயநகரம் எஸ்.பி தீபிகா, முதியவருக்கு உதவிய போக்குவரத்து போலிஸாரை நேரில் வரவழைத்து அவர்களின் மனிதாபிமானத்தை பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினார்.

2 போக்குவரத்து போலிஸார் பசியால் வாடிய முதியவருக்கு உதவி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘இதெல்லாம் நமக்கு தேவையா கோப்பால்!?’ : இந்தி டப்பிங்கில் வைரல் ஆகும் சிறுவர்களின் வீடியோ!