India

யோகி அமைச்சரவையில் இருந்து இன்னொரு விக்கெட்டும் அவுட்; உச்சகட்ட பரபரப்பில் உ.பி., சட்டமன்ற தேர்தல்!

உத்தர பிரதேசத்தின் 403 தொகுதிகளுக்கு பிப்ரவரை 10ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பாஜகவும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளும் தீவிரமாக தேர்தல் களத்தை எதிர்நோக்கி வருகின்றன.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்பே உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு தேர்தல் காய்ச்சல் அடிக்க தொடங்கியிருக்கிறது. அதன்படி யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இருந்து சுவாமி பிரசாத் மவுரியா ராஜினாமா செய்ததோடு பாஜகவில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து மற்றுமொரு அமைச்சரான தாரா சிங் சவுகானும் ராஜினாமா செய்தார்.

தற்போது உத்தர பிரதேச மாநிலத்தின் ஆயுஷ்துறை அமைச்சரான தரம் சிங் சைனியும் ராஜினாமா செய்த கையோடு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து அந்த கட்சியில் இணைந்துள்ளார்.

முன்னதாக ஆறு சட்டமன்ற உறுப்பினர்களும், 2 அமைச்சர்களும் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்து விலகியிருக்கும் வேளையில் மூன்றாவதாகவும் அமைச்சர் ஒருவரே ராஜினாமா செய்த நிகழ்வு பாரதிய ஜனதா கட்சியினரிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.